
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் விஜய். அவரது பிறந்தநாளை இப்போதே அவரது கட்சியினர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி ஒற்றை அறிக்கை மூலம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் சூட்டினார்.
விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் 2ஆவது மாநாட்டையும் நடத்தி தமிழக அரசியலை அதிர செய்தார். இலட்சக்கணக்கான மக்கள் கூடிய அந்த மாநாடுகளை இந்தியாவே உற்று நோக்கியது. அரசியலில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்த விஜய், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளை கொள்கை தலைவர்களாக அறிவித்தார்.
கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே சட்டசபை பொதுதேர்தலை த.வெ.க. எதிர்கொண்டது. விசில் சின்னத்துடன் கூட்டணியின்றி மக்களை சந்தித்த விஜய், ‘உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்திருக்கிறேன், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று பிரசாரம் மேற்கொண்டார். அவரின் பிரசாரம் மக்கள் மனதை தொட்டது.
.
இதுவரை, நடிகராக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் முதல்-அமைச்சராக தனது ‘முதல்’ பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், சட்டசபையில் நாளை அவருக்கு சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூற இருக்கிறார்கள்.
முதலமைச்சராக பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சட்டசபையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், நல உதவிகள் வழங்க த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.





