இலங்கை

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியுடன் தமிழரசு பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸை (Laure Beaufils) , இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா சாணக்கியன் , பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் இணைந்து சந்தித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

 

 

இந்தச் சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழர் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

 

 

 

குறிப்பாக, அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதன் அவசியம், நீண்டகாலமாக நடத்தப்படாமல் நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டிய தேவை, மனித உரிமைகள் பாதுகாப்பு, பொறுப்புக்கூறல், இடைநிலை நீதி, ஜனநாயக மற்றும் நல்லாட்சிச் சீர்திருத்தங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

 

 

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகள், அவர்களது சமத்துவம், அடிப்படை உரிமைகள், கண்ணியம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இலங்கையில் அனைத்து மக்களுக்கும் நீதியான, கண்ணியமான மற்றும் நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான அரசியல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

 

 

மேலும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், அரசியல் பொறுப்புணர்வை மேம்படுத்துதல், நல்லாட்சியை உறுதிப்படுத்துதல் மற்றும் பொருளாதார மீட்சியுடன் இணைந்த நிலையான அரசியல் முன்னேற்றம் நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்பதையும் சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

 

 

 

இந்தச் சந்திப்பு பரஸ்பர புரிதலையும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்திய பயனுள்ள சந்திப்பாக அமைந்தது. ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட நிலையான அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகளுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவும் ஆக்கபூர்வமான ஈடுபாடும் உயர்வாகப் பாராட்டப்பட்டது.

 

 

 

இத்தகைய தொடர்ச்சியான சர்வதேச ஒத்துழைப்பும் இராஜதந்திர ஈடுபாடுகளும், இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து மக்களுக்கும் நீதியை உறுதிப்படுத்தும் நிலையான அரசியல் தீர்வை நோக்கிய முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என்ற நம்பிக்கையும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button