
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயம் வெற்றியீட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தமது கட்சி தொடர்ந்து ஜனநாயக வழிகளில் போராடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர்,
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வந்த போதிலும், அதிகாரங்களைத் தன்வசம் குவித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் அளவுக்கு அதிகமான பெரும்பான்மை கிடைக்கக் கூடாது என்றும், அதிகப்படியான பெரும்பான்மை ஆரோக்கியமற்ற அதிகாரக் குவிப்பிற்கே வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்ட அவர், வறுமை ஒழிப்பிற்கான விரிவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை அரசியல் கூட்டணிகள் குறித்துப் பேசிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கொள்கை அடிப்படையிலான ஒத்துழைப்பை நோக்கிச் செயல்பட்டு வருவதாகவும், பதவிகளை விடுத்து பொதுவான கொள்கைகளின் அடிப்படையில் தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக இணையுமாறு மிதவாத அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்





