
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்குள்ள சிறுமிகள் மற்றும் பெண்களின் கல்விச் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றது.
அவர்கள் தங்களது பதின்ம வயதை (Teenage) எட்டும்போது, வீடுகளுக்குள்ளேயே முடக்கப்படும் அவல நிலை தொடர்வதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது
தற்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தக் கல்வித் தடையின் காரணமாக, அங்குள்ள இளம் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கல்வி கற்க முடியாத சூழலால், பெரும்பாலான குடும்பங்கள் தங்களது இளம் பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வரும் அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்தத் தடை அமுலுக்கு வந்த தொடக்க ஆண்டுகளில், ஆப்கான் பெண்கள் காபூல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களின் வீதிகளில் இறங்கி கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
எனினும், தலிபான் அரசின் பாதுகாப்புப் படைகள் அந்தப் போராட்டங்களை வன்முறையைக் கொண்டு மிகக் கொடூரமாக ஒடுக்கின. இதன் காரணமாக, தற்போதைய சூழலில் அங்கு யாராலும் தலிபான் அரசுக்கு எதிராகப் பொதுவெளியில் குரல் எழுப்ப முடியாத அச்சநிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், பெண் கல்விக்கு நீடிக்கும் இந்த முட்டுக்கட்டை மற்றும் சர்வதேச சமூகத்தின் விமர்சனங்கள் குறித்து தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்தல்லா ஃபித்ரத்தி தெரிவிக்கையில் , .
தற்போது சுமார் 70 இலட்சம் சிறுவர்களும் 50இலட்சம் சிறுமிகளும் கல்வி பயின்றுவருவதாக எமது புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.
6 ஆம் வகுப்பிற்கு பிந்தைய இந்த கட்டுப்பாடு என்பது ஒரு தனிப்பட்ட விவகாரமாகும். சிறுமிகளுக்கான இடைநிலை மற்றும் உயர் கல்வி எப்போது மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பது கல்வி அமைச்சிடம் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகும்.
இதற்கு அவர்கள் திருப்திகரமான ஒரு பதிலை அளிப்பார்கள் என நம்புகின்றோம்.
இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவதில் இஸ்லாமிய எமிரேட்ஸ் உறுதியாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





