இலங்கை

15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க பொது மக்கள் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்

எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரசாங்க திணைக்களம், உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் இந்தச் சேவைகளுக்கு எவ்வித தடங்கல்களும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள 15 அத்தியாவசிய சேவைகளின் விபரங்கள் வருமாறு:

01. மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள்.

 

02.பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம்.

 

03.மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகள்

 

04.பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்திற்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகள்

 

05..வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா வசதிகளைப் பேணுதல்.

 

06.நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவைகள்.

 

07.உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல்.

 

08..மாவட்ட, பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் களமட்ட அதிகாரிகள் மூலமாக ஆற்றப்பட வேண்டிய அனைத்து சேவைகள்.

 

09.அவசர நோயாளர் காவு வண்டி (Gilan ratha) சேவைகள்.

 

10.இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவைகள்.

 

11.உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படும் நீர், மின்சாரம், தீயணைப்பு, கழிவுவகற்றல் மற்றும் துப்புரவுச் சேவைகள்.

 

12.நீர்ப்பாசனம் தொடர்பான அனைத்து சேவைகள்.

 

13.தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறை சார்ந்த அனைத்து சேவைகள்.

 

14. தாழ்நிலங்களை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பான சேவைகள்.

 

15.விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சார்ந்த அனைத்து சேவைகள்.

 

சூறாவளிக்கு பிந்தைய இந்த அவசர சூழ்நிலையில், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button