
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை உலகெங்குமிருந்து சுமார் 16 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் புனித மக்கா நகரிலுள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.
வெண்ணிற ஆடைகள் அணிந்தவண்ணம் ஒன்று கூடிய ஹாஜிகள், உலக சமாதானம், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அரபாவில் பக்திப் பெருக்குடன் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
இம்முறை அரபா விசேட பேருரையை (குத்பா) மஸ்ஜிதுந் நபவியின் கம்பீரக் குரலாக விளங்கும் பிரதம இமாம், ஷேக் அலி அல் ஹுதைஃபி , மஸ்ஜிதுல் நமிராவிலிருந்து அரபு மொழியில் நிகழ்த்தினார்.
சவூதி அரேபிய நேரப்படி நேற்று முன்தினம் (26) பிற்பகல் 12:15 மணிக்கு இடம்பெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குத்பா பேருறை உலகளவில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதுடன், தமிழ் மொழி உட்பட உலகின் 35 சர்வதேச மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டு ஒலியேற்றப்பட்டது.
உலகெங்கிலுமிருந்து வருகை தந்துள்ள இலட்சக்கணக்கான ஹாஜிகள் எவ்வித அசௌகரியங்களுக்கும் முகம் கொடுக்காமல், தமது ஹஜ் கடமைகளைச் சிறப்பான முறையில் நிறைவேற்றத் தேவையான சகல வசதிகளையும் சவூதி அரசாங்கம் மிக நேர்த்தியாக மேற்கொண்டுள்ளது
புனித ஹஜ்ஜை முன்னிட்டு சவூதி அரேபியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதேசமயம், ஹாஜிகளுக்குத் தேவையான உணவு, அதிநவீன போக்குவரத்து, 24 மணி நேர சுகாதாரச் சேவை மற்றும் தங்குமிடம் என அனைத்து ஏற்பாடுகளையும் சவூதி அரசு முன்னெடுத்துள்ளது.
இம்முறை இலங்கையிலிருந்தும் சுமார் 3,500 ஹாஜிகள் தமது புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவுக்கு வருகை தந்துள்ளனர் என்பதுடன், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையிலான குழுவினர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரில் சென்று மேற்பார்வையிட்டுள்ளனர்.





