
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக கொழும்பு வருவதற்குத் திட்டமிட்டிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) தலைவர் அமினுல் இஸ்லாம், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கிய போட்டியைப் பார்ப்பதற்காக வருவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் அமினுல் இஸ்லாம் முன்னர் திட்டமிட்டிருந்தார். எனினும், தற்போது அவர் அந்தத் தீர்மானத்தைக் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக குவைத் சென்றிருந்த அவர், அங்கிருந்து நேரடியாக கொழும்பு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தனது பயணத்தை இரத்துச் செய்துவிட்டு மீண்டும் டாக்காவுக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நடுவர் குழுத் தலைவர் இப்திகார் ரஹ்மான் கருத்துத் தெரிவிக்கையில், “தமது நாடு ( பங்காளதேஷ்) விளையாடாத ஒரு போட்டியைப் பார்ப்பதற்கு ஏன் தேவையில்லாமல் அங்கு செல்ல வேண்டும் என அமினுல் இஸ்லாம் கருதுகின்றார். இதனாலேயே அவர் கொழும்புப் பயணத்தைத் தவிர்த்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் (BCCI) உள்ள உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்தப் போட்டியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.





