
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தலைநகர் பியூனஸ் ஐர்ஸில் ரசிகர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டுள்ளது.
லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் திரண்டிருந்தனர். ஆனால் கூடுதல் நேரத்தில் பெர்ரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியின் போது என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். போட்டி முடிந்த பின்னரும் இரு அணிகளின் வீரர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பாரேடெஸ் ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவை தள்ளியதாக சிவப்பு அட்டை பெற்றார்.
இதனையடுத்து, பியூனஸ் ஐர்ஸில் உள்ள ஒபெலிஸ்க் தேசிய நினைவுச் சின்னத்தை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து உள்ளே செல்ல ரசிகர்கள் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் சுமார் 20 நிமிடங்கள் நீடித்த கலவரத்தில், ரசிகர்கள் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீது வீசியதாகவும், அதற்கு பதிலடியாக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை வாகனங்களைப் பயன்படுத்தி கூட்டத்தை கலைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் குறைந்தது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையில், தோல்வியடைந்த போதிலும் அர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவியர் மிலேய் தேசிய விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு தீர்மானிக்கும் நாளில் அந்த விடுமுறை அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.





