
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால் பாரிய தோல்வியைச் சந்திக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகிறது.
இதன் காரணமாக பொருளாதார ரீதியாக எவ்வித முன்னேற்றத்தையும் அரசாங்கத்தால் காட்ட முடியாது என அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எதனையும் சாதிக்காவிட்டாலும், தமிழ் மக்களைக் கொண்டு ஒற்றையாட்சி முறையை அங்கீகரிக்கச் செய்யாமல் அவர்களால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்





