
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஆன்லைன் கேமிங் மசோதாவிற்கு ஒப்புதல் தரப்பட்டது. இந்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதில் பணம் வைத்து விளையாடும் அனைத்து கேமிங் பரிவர்த்தனைகளும் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் துறை இருக்கிறது. இருப்பினும், ஆன்லைன் கேமிங் துறை தொடர்பாகத் தெளிவான சட்டங்கள் இல்லை. இதனால் மோசடி, ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவது என பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. இதற்கிடையே ஆன்லைன் கேம்களை முறைப்படுத்தும் புதிய ஆன்லைன் கேமிங் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது
ஆன்லைன் கேமிங் தடை சட்டம்
ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம்’ என்ற இந்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யும் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டிருந்த சூழலில், அதற்கு நடுவே மத்திய அமைச்சர் ரிரன் ரிஜிஜு இந்த மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியனர் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இதன் கீழ் பணம் வைத்து விளையாடும் அனைத்து கேமிங் பரிவர்த்தனைகளும் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பணம் வைத்து விளையாடும் கேம்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதைத் தடுக்கவே மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறது.

ஏன் முக்கியம்
அதன்படி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பிராசஸ் செய்ய அனுமதிக்கப்படாது. இதுதான் ரொம்ப முக்கியமானது. பணம் வைத்து விளையாடும் கேம்களை நேரடியாகத் தடை செய்யவில்லை என்றாலும் அது தொடர்பான பரிவர்த்தனைகளை பிராசஸ் செய்யக்கூடாது என்று இந்த மசோதா சொல்கிறது. இதனால் ஆன்லைன் கேம்களால் பணம் வசூலிக்க முடியாது. இதனால் இதுவும் ஒரு வகையில் மறைமுகத் தடைதான் என்கிறார்கள் தொழில்துறையினர்.!
மேலும், பணத்திற்காக விளையாடும் கேம்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. அதேநேரம் E-sports மற்றும் பணம் சாரா திறன் சார்ந்த விளையாட்டுகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும். பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோத கேமிங் தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இது வழிவகுக்கிறது. இன்று இது மக்களவையில் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அரசு ஆன்லைன் கேமிங் தளங்களுக்கு 2023ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு 28% ஜிஎஸ்டி விதித்தது. அப்போது முதலே கேமிங் துறையை மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. 2025 நிதியாண்டு முதல், ஆன்லைன் விளையாட்டுகளிலிருந்து கிடைக்கும் வெற்றித் தொகைகளுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு கேமிங் நிறுவனங்களும் இந்திய வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 2023 டிசம்பரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்படாத பெட்டிங் கேம்கள் கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், மிகப் பெரிய அபராதமும் விதிக்கப்படலாம். பெட்டிங் மற்றும் சூதாட்டம் தொடர்பாகக் கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் பெட்டிங் அல்லது சூதாட்டம் சார்ந்து 1,400-க்கும் மேற்பட்ட இணையதளங்களையும், செயலிகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.
பொதுமக்கள் புகார்
சிறுவர்களிடையே ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவதாகும் பலரும் பெரும் தொகையை இதுபோன்ற கேம்களுக்கு செலவழிப்பதாகவும் பலரும் புகாரளித்தனர். இதனால் இதுபோன்ற விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதேநேரம் கேமிங் தொழிற்துறையினர் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். அதுபோல அனைத்து கேமிங் பரிவர்த்தனைகளும் தடை விதிக்கப்பட்டால் அது இந்தியாவில் கேமிங் துறையையே அழித்துவிடும் எனக் கவலை தெரிவிக்கிறார்கள். கேமிங் துறையை முறைப்படுத்துவது தேவை என்றாலும் இதுபோல மொத்தமாகத் தடை விதிப்பது துறையையே அழித்துவிடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.





