உலகம்

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதிகளவிலான உயிரிழப்புகள் ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன், காளி (Cali) நகரமும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

மீட்பு நடவடிக்கைகளுக்காக போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து பேரழிவு நிவாரணக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியில் உள்ள சொக்கோ மாகாணத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாகக் கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சுமார் 96 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கிப்தோ உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குக் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் பெரெய்ரா , மனிசாலேஸ் , கிப்தோ , ஆர்மீனியா , கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய விமான நிலையங்களின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் ஒன்பது மாகாணங்களிலும் 32 மாகாணத் தலைநகரங்களிலும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

 

மேலும், அண்டை நாடான வெனிசுலாவின் தாசிரா மாநிலம், பாரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவுமில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button