தமிழீழம்

கீரிமலையில் தேங்கும் கழிவுகள்; சுற்றுச்சூழலை பாதுகாக்க நாளை மாபெரும் போராட்டம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

 

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை கொட்டியுள்ளனர்.

கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் பையெழுத்து இட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும், இதுவரையில் காத்திரமான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் ஆடி அமாவசை தினமான நாளைய தினம் புதன்கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட குப்பைகளால் ஏற்படும், சூழல்சார், சமூகம்சார் பிரச்சனைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று, தமது, முன்னோருக்கு பிதிர்கடன்களை நிறைவேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கீரிமலை பகுதியில் பலர் ஒன்று கூடுவார்கள் என்றும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட செல்வார் என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவசை தினத்திற்கு முன்னர், மீள அள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ள எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button