தமிழீழம்

சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் !

அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

 

 

 

“குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்னும் பொருண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

 

 

இக்கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள், “பாடினால் பயங்கரவாதமா? தாயகக் கலைஞனை உடனே விடுவி!”, “தமிழர் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?”, “ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் PTA-வை உடனே நீக்கு!”, “சட்டத்தின் பெயரால் நடக்கும் அரச பயங்கரவாதத்தை உடனே நிறுத்து!”, “உரிமைக்குரல் எழுப்பத் தமிழருக்குத் தடையா? ஜனநாயகம் எங்கே?”, “உடைப்போம் உடைப்போம்! குரல்வளையின் விலங்கை உடைப்போம்! ” போன்ற முழக்கங்கள் அடங்கிய வாசக அட்டைகளை ஏந்தியவாறும், உணர்ச்சிப் பூர்வமாக முழக்கங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

இப்பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button