
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் சில சமரசங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக அந்நாட்டு துணை வெளிவிவகார அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி (Majid Takht-Ravanchi) தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் ஈரானின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க முன்வந்தால், அணுசக்தித் திட்டம் தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்கத் தாம் தயாராக இருப்பதாக ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் ஏற்கனவே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 17ஆம் திகதி ஜெனீவாவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
இச்சந்திப்பில் அமெரிக்கத் தரப்பில் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) மற்றும் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரானியப் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளனர்.
அணுசக்தி விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டத் தயாராக இருக்கும் ஈரான், தனது ஏவுகணைத் திட்டம் போன்ற பிற விவகாரங்களை அணுசக்திப் பேச்சுவார்த்தைகளுடன் இணைப்பதற்குத் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





