
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் காரணமாக, அமெரிக்காவில் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் உடனான மோதல் காரணமாக அமெரிக்கா முழுவதும் ஒரு கலன் (Gallon) பெட்ரோலின் விலை 4.50 டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போது இருந்த விலையை விட இது சுமார் 50 சதவீதம் அதிகமாகும்.
இந்த திடீர் விலை உயர்வு காரணமாகப் பொதுமக்களின் மாதாந்த உணவு மற்றும் அத்தியாவசியச் செலவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் நடத்தப்பட்ட ‘ரொய்ட்டர்ஸ்/இப்சோஸ்’ (Reuters/Ipsos) கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்கர்களில் 10 இல் 8 பேர் இந்த எரிபொருள் விலை உயர்வுக்கு டொனால்ட் டிரம்பே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவரது பொருளாதாரக் கொள்கைகளுக்கு வெறும் 30 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மக்களின் இவ்வாறான பொருளாதாரத் துயரங்கள், ஈரானுடன் ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டுவதற்கு உங்களைத் தூண்டுகிறதா என இந்த வாரம் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “அமெரிக்கர்களின் நிதி நிலைமை குறித்து நான் சிந்திப்பதில்லை. ஈரான் விவகாரத்தைப் பொறுத்தவரை எனக்கு முக்கியமானது ஒன்றுதான், அவர்களால் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த கருத்து, அவர் பொதுமக்களின் கவலைகளைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் செல்வதைக் காட்டுவதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இருப்பினும், கொலராடோவின் விவசாயப் பகுதிகள் மற்றும் ட்ரம்பின் பாரம்பரிய ஆதரவுப் பிரதேசங்களிலுள்ள வாக்காளர்கள் அவரது இந்த முடிவை ஆதரித்துள்ளனர்.
ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அதிக எரிபொருள் விலையைக் கொடுக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ட்ரம்ப் தனது ஆதரவுத் தளத்துடன் கொண்டுள்ள வலுவான பிணைப்பைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





