
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்று வியாழக்கிழமை இரவு முதல் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மூண்டுள்ள கடும் மோதலில், பாகிஸ்தான் தரப்பில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, பாகிஸ்தான் எல்லை நிலைகளை இலக்கு வைத்து “பெரிய அளவிலான” தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தமது படைகள் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாக பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் 15 ராணுவச் சாவடிகளைக் கைப்பற்றியுள்ளதாக தலிபான் பேச்சாளர் ஜபிஹல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்வா பகுதியில் உள்ள பல இடங்கள் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
பதிலடித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
எல்லைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
குறிப்பாக டொர்க்கம் எல்லைப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் தற்போது முற்றாக முறிந்துள்ளது.
2,500 கிலோமீட்டர் நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இரு நாடுகளுக்கும் இடையே தீவிரவாத முகாம்கள் தொடர்பான விவகாரத்தில் நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





