அரசியல்

ஜனாதிபதியை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார் எம்.பி

ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இலங்கை கடற்படை இல்லையா என நாடாளுமன்ற உறுப்பினரை் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் குறித்து கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அதிகாரம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்டில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவர்களாக கடற்படை உள்ளார்களா அல்லது ஜனாதிபதி யாழ் மக்களை ஏமாற்றுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறாரா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமாரா திசாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்த தெரிவிக்கையில், மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் அதனை எமது அரசாங்கம் செயற்படுத்தும் என வாக்குறுதி வழங்கி இருந்தார்.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதி வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதும் விடுவிக்கப்படாத பொது மக்களின் காணிகளை தமது அரசாங்கம் பொறுப்பேற்றாதும் விடுவிப்போம் என்ற வாக்குறுதியையும் வழங்கி இருந்தார்.

ஏக்கர் காணி
இருப்பினும், இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் மிகக் குறுகிய ஏக்கர் காணிகளைமட்டும் விடுவித்தமை அவர்களும் கடந்த அரசாங்கங்களைப் போல வாக்குகளை பெறுவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றிய நாடகமாகவே பார்க்க முடிகின்றது.

யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்றும் தமது பூர்வீக நிலங்களுக்குள் மக்கள் செல்ல முடியாத அவல நிலையில் இருக்கின்றனர்.

அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன் வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பினர் மக்களை ஒன்று திரட்டி தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தை நடத்திய நிலையிலும் தற்போது கடற்படை தமது தேவைக்காக தனியார் காணியை அபகரிக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது.

கடற்படை காணி
இந்த நாட்டின் அதிகாரம் மிக்க முப்படைகளையும் கட்டுப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இருக்கின்ற நிலையில் அவரின் வாக்குறுதிகளை மீறி கடற்படை காணி பிடிப்பில் ஈடுபடுகிறதா ?

இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றது சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகிறமை அனைவரும் அறிந்த விடயம்.

குறிப்பாக கூறப்போனால் வலி வடக்கு தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் புதிய கட்டுமானங்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும் இலங்கையை ஆட்சி பெளத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் என்றைக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வராது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button