தமிழீழம்

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தினை நிர்வகிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் செயற்பாடுகள் உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டனர்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை முறையான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் முன்னெடுத்து, அதன் நோக்கங்களைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இச்சபையில் பதவி வழியாக நான்கு உறுப்பினர்களும், துறைசார் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து நிபுணத்துவ உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.

பதவி வழி உறுப்பினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வர்ணகுலசூரிய பிரின்ஸ் சேனதீர, யாழ். மாநகர சபையின் முதல்வர் வி.மதிவதனி, யாழ். மாநகர சபையின் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் ஆகியோரும், துறைசார் உறுப்பினர்களாக கலை மற்றும் பண்பாட்டுத் துறையைச் சேர்ந்த சாந்தினி சிவநேசன், சட்டத்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரபாகரன், வர்த்தகத் துறையைச் சேர்ந்த இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன், கல்வித்துறையைச் சேர்ந்த கோசலை மதன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சிவகொழுந்து சிறீசற்குணராஜா ஆகியோரும் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையின் உறுப்பினர்களாக சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமான சாரா ஜோர்ஜ் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை அதன் நோக்கங்களுக்கமைவாக முறையான நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான முக்கியமான ஆரம்ப கட்டமாக அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button