
இலங்கை யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுக்கு, தேவையான உதவிகளை வழங்குமாறு கோரி கனேடிய அரசுக்கு, கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது
இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,
இலங்கையின் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுகளுக்கும் விசாரணைகளுக்கும் கனடா தனது உலகத்தரம் வாய்ந்த தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க வேண்டும் என்று கனடியத் தமிழர் பேரவை (CTC) வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்திடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
இப்பிரதேசத்தில் நிலையான பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் மனித உரிமைகள் சார்ந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவேண்டி, காலவிரயமின்றி நிகழவேண்டிய அகழ்வாராய்வுகளுக்கு கனடாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான திணைக்களம் தீவிர ஆதரவளிக்க வேண்டும் என பேரவை வலியுறுத்துகிறது.
தடயவியல், தொல்லியல், மானிடவியல் ஆகிய துறைகளில் கனடா மிகவும் முன்னேற்றமடைந்த பன்முகத்திறன்களைக் கொண்டுள்ளதையும், இவை முன்னாள் பூர்வகுடி குடியிருப்புப் பள்ளித் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகள் மூலம் மேம்படுத்தப்பட்டிருந்ததையும் இந்த வேண்டுகோள் சுட்டிக்காட்டியது.
செம்மணியில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுகளில் தடயவியல் நேர்மையைப் பேணுவதற்கு இந்த அதிநவீன அறிவியல் முறைகள் பொருத்தமானதும் அவசியமானதுமான கருவிகள் என்பதைப் பேரவை சுட்டிக்காட்டியது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு ஒன்று இந்தத் தளத்தைப் பார்வையிட அனுமதி பெற்றதன் மூலம் இந்த சூழ்நிலையின் அவசரம் மேலும் உணர்த்தப்படுகிறது. இது சுயாதீனமான உலகளாவிய அறிவியல் மேற்பார்வையினதும் சிறப்பு கண்காணிப்பாளர்களினதும் முக்கிய மற்றும் உடனடித் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
“செம்மணியில் புதைந்துள்ள உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்கான தார்மீகப் பொறுப்பையும் தனித்துவமான அறிவியல் நிபுணத்துவத்தையும் கனடா கொண்டுள்ளது.” என்று கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் ஸ்ரீதரன் துரைராஜா தெரிவித்தார்.
“நமது நாட்டின் மேம்பட்ட தடயவியல் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தளத்தின் சீர்குலைவைத் தடுக்கத் தேவையான நடுநிலையான மேற்பார்வையை வழங்க முடியும். இது துயரில் ஆழ்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உண்மையான பொறுப்புக்கூறல் மற்றும் ஆறுதலை நோக்கிய ஒரு பாதையைத் திறக்கும்;.”
இருதரப்பு வழிமுறைகள், அனைத்துலக அமைப்புகள், அல்லது சுயாதீன ஆலோசனை வழங்கல் மூலமாக கனடாவின் பங்களிப்பு இருப்பது, ஆதாரங்களைப் பாதுகாக்கும் என்றும், அகழ்வாய்வைக் கடுமையான சர்வதேச மனித உரிமை நெறிமுறைகளுடன் சீரமைக்கும் என்றும் பேரவை நம்புகிறது என அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







