
தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த 10ஆம் திகதி பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான அமைச்சுப் பொறுப்புகள் இன்று உத்தியோகபூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, காவல்துறை, உள்துறை, பொது நிர்வாகம், விசேட திட்ட செயலாக்கம் மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை முதலமைச்சர் விஜய் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
அத்துடன், முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் தொழில்துறையை கீர்த்தனாவும், பாடசாலை கல்வித் துறை, தொல்லியல் துறை, செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றை ராஜ்மோகனும் பொறுப்பேற்றுள்ளனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக அருண்ராஜும், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக வெங்கட்ரமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கனிமவளம் மற்றும் சுரங்கத் துறையை டி.கே.பிரபு கவனிக்கவுள்ள அதேவேளை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறையின் அமைச்சராக ஆனந்த் செயல்படுவார்.
மேலும், நிதித் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் ஆகிய பொறுப்புகள் செங்கோட்டையனுக்கும், மின்சார துறை, சட்டத் துறை, நீதி, சிறைத் துறை மற்றும் ஊழல் தடுப்பு ஆகிய துறைகள் நிர்மல்குமாருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.





