
யுக்ரைன் தலைநகர் கெய்வ் (Kyiv) மீது ரஷ்யப் படைகள் இன்று அதிகாலை நடத்திய உக்கிர ஏவுகணைத் தாக்குதல்களில் 12 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். அத்துடன், பல மருத்துவர்கள் உட்பட மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகரின் போடில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள 16 மாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணைச் சிதறல்கள் வீழ்ந்து வெடித்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இத்தாக்குதலினால் அங்கு பெரும் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றொரு சிறுமியையும் அவரது தாயாரையும் மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதேவேளை, கெய்வ் நகரின் ஒபோலோன்ஸ்கி (Obolonsky) மாவட்டத்திலும் ஏவுகணைத் துண்டுகள் வீழ்ந்துள்ளன. அ
அங்குள்ள குடியிருப்பு அல்லாத கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.
தலைநகரை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





