
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றைத் திசை திருப்பும் நோக்கிலேயே “2029 இல் நாமல் ஜனாதிபதி” என்ற கதையைக் கூற மொட்டுக் கட்சியினர் ஆரம்பித்துள்ளனர். இது மொட்டுவின் பகல் கனவு மாத்திரமே.” – இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என மொட்டுக் கட்சியினர் கூறி வருவது தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2029 இல் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி என்ற தகவல் திட்டமிட்ட அடிப்படையிலேயே பரப்பப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியாவதற்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஓரிரு சபைகளிலாவது வென்று ஆட்சி அமைத்திருக்க வேண்டும் அல்லவா? அந்தத் தேர்தலில்கூட அவர்கள் மண்கவ்வினர்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டியில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக உள்ள விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சரியான திசையை நோக்கி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
எனவேதான் விசாரணை அதிகாரிகளுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நோக்கில், விசாரணையைத் திசை திருப்பும் வகையில் இப்படியான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது மொட்டுவின் பகல் கனவு மாத்திரமே.” – என்றார்.





