
முன்னைய அரசினால் ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய அரசும் எல்லை நிர்ணய காரணங்களை சொல்லி காலம் தாழ்த்த நினைக்கின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன் தனது அறிக்கையில் இன்று (06) தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
மாகாண சபை முறைமையானது முழு இலங்கைக்குமானதாக இருந்தாலும் குறிப்பாக வடகிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ் பேசும் தேசிய சிறுபான்மை இனம் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு ஏற்படுத்தப்பட்ட தேசிய பெரும்பான்மை சமூகம் அதிகார பரவலாக்கல் முறையை தவிர்த்து ஏதோ ஒரு வகையில் இனங்களுக்கு இடையிலான முறுகல் போக்கை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது.
வரலாறு கூறும் பண்டா செல்வா ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக தமிழ் பேசும் சமூகம் தனது உலக சுய நிர்ணய உரிமைகளுக்காக அகிம்சை வழி போராட்டங்களை முன்னெடுத்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்த மாகாண சபை முறைக்கு தேர்தல் மூலமாக தோழர் பத்மநாபா தலைமையிலான குழுவினர் மாகாண ஆட்சி நடைமுறையை திருகோணமலையை தளமாகக் கொண்டு தோழர் அண்ணாமலை வரதராஜ பெருமாள் முதலமைச்சர் ஆக செயற்பட்டார்.
தொடர்ந்து மாகாண ஆட்சி முறை வடகிழக்கில் நடைபெற்றதால் அதிகாரங்களான காணி, பொலிஸ், சுகாதாரம், கல்வி, நிதி போன்ற அதிகாரங்களை வழங்க வேண்டிவரும் என்பதை ஆராய்ந்த பிரேமதாச அரசு பல சதித் திட்டங்களை வகுத்து அன்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எழுத்து மூலம் உள்ள 13ஆம் திருத்தச் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் முன்வர வேண்டும்.
தற்போது தட்டில் இருக்கும் கீரை சுண்டலுடன் உள்ள சோத்தை சாப்பிடாமல் நாளை வரும் கானல் நீர் பிரியாணிக்கு ஆசைப்படுவது நியாயமற்ற செயல். சமஸ்டி தேவைதான் முதலில் பதின்மூன்றாம் திருத்தத்தின் ஊடான மாகாண அதிகாரங்களை பெற பொது வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.
இதற்கான முதற்படியாக முன்னாள் ஒன்றிணைந்த வடகிழக்கு முதலமைச்சராக இருந்த தோழர் வரதராஜப்பெருமாள் பல்வேறு தரப்பினரிடம் பல பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். இதில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் பங்குகொள்வதோடு எதிர்வருகின்ற நாட்களில் வடகிழக்கு சூழலில் பல்வேறு அழுத்த நடவடிக்கைகளில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. என தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் சார்பாக தோழர் சின்னமோகன் தனதுஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.





