இலங்கை

இலங்கை துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெருந்திரளான ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் புதிய தகவல்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரேவி சுதா’ என்பவரே இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அங்கொட பிரியந்த மற்றும் ரூபன் ஆகியோரும் இதனுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தற்போது சந்தேகிக்கப்பதுடன், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் மொராக்கோவிற்கு மீள்ஏற்றுமதி செய்யத் தயார் நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தபோதிலும், இந்த போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கே திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் இருப்பதாக வெளிநாட்டிலுள்ள தனிப்பட்ட உளவாளி ஒருவரிடமிருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடித்துவக்குவிற்கு தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய கொள்கலனை பரிசோதிப்பதற்காக கடந்த 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டதுடன், அதற்கமைய நேற்று (31) அந்த கொள்கலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் சுங்க அதிகாரிகளின் உதவியும் கிடைத்தது.

கொள்கலனுக்குள் இருந்த பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சுமார் 472 கிலோகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த போதைப்பொருள் தொகை உள்நாட்டு வர்த்தகர் ஒருவரின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்தது.

அதன்படி, தெமட்டகொடையைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சஷிதரன் என்ற வர்த்தகர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இதனுடன் தொடர்புடைய இரண்டு பாகிஸ்தானியர்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்ததுடன், அவர்கள் ஜம்பட்டா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்தபோது அவர்களைக் கைது செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தெமட்டகொடை வர்த்தகரின் நிறுவனத்தின் ஊடாகவே குறித்த போதைப்பொருள் தொகையை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகக் கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தானியர்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button