
இலங்கையின் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வரலாற்றில் முதன்முறையாக 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் திங்கட்கிழமை (31) இலங்கைக்கு வருகை தந்தனர்.
அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அன்புடன் வரவேற்கப்பட்டனர். இதன்போது, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் (SLTPB) ஏற்பாட்டில் பாரம்பரிய கண்டிய நடனக் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்தக் கலாசார நிகழ்வு இலங்கையின் விருந்தோம்பல் பண்பையும், நாட்டின் செழுமையான பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்தது.
மேலும், வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை தேயிலைச் சபையின் அனுசரணையுடன் சிலோன் தேயிலைப் பொதிகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் இலங்கையின் விருந்தோம்பல் பண்பையும், உலகப் புகழ்பெற்ற சிலோன் தேயிலைத் தொழில்துறையையும் எடுத்துக்காட்டும் வகையில் வரவேற்பு நிகழ்வு அமைந்திருந்தது.




