
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளது என நேபாள சுற்றுலா சபை (NTB) வெளியிட்டுள்ள சமீபத்திய முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டவர்கள்; 127 பேர் நேபாளியர்கள் என NTB தெரிவித்துள்ளது. போதேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளை ஒட்டிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த அல்லது அந்தப் பகுதிகள் வழியாகப் பயணித்தவர்களே இதில் அடங்குகின்றனர்.
ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை நண்பகல் 12 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை முதலில் 384 பயணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கைகள் முதற்கட்ட பதிவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், பயண நிறுவனங்கள், வழிகாட்டிகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து பெறப்படும் தகவல்களுடன் அவை தொடர்ந்து சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் NTB வலியுறுத்தியுள்ளது.
எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்?
நாட்டுவாரியாக வெளியிடப்பட்ட பட்டியலின்படி:
- 🇮🇳 இந்தியா – 178 பேர்
- 🇺🇸 அமெரிக்கா – 65 பேர்
- 🇺🇦 உக்ரைன் – 53 பேர்
- 🇲🇾 மலேசியா – 51 பேர்
- 🇦🇺 ஆஸ்திரேலியா – 35 பேர்
- 🇬🇧 பிரிட்டன் – 33 பேர்
- 🇨🇦 கனடா – 25 பேர்
மேலும் ஜெர்மனி, ரஷ்யா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, லாட்வியா, ஜப்பான், நியூசிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
எங்கு வெள்ளம் ஏற்பட்டது?
ஆகஸ்ட் 26 புதன்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ரசுவா, நுவாகோட், தாதிங் மற்றும் கோர்கா மாவட்டங்களில் ஆற்றங்கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு நிலையை கண்டறியும் பணியில் கலாசாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, நேபாள சுற்றுலா சபை, சுற்றுலா காவல்துறை மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
அதேவேளை, மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போதேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளை ஒட்டிய நான்கு மாவட்டங்களின் பகுதிகள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளதாக NTB தெரிவித்துள்ளது. அதேவேளை, வெள்ளம் பாதித்த முக்கியப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள பிரதேசங்கள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தேடுதல், மீட்பு மற்றும் காணாமல் போனவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், பயணிகள் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு நேபாள சுற்றுலா சபை கேட்டுக்கொண்டுள்ளது.





