உலகம்

ஜெர்மன் விமானநிலையத்திற்குள் தாக்குதல் நடத்திய ரஷ்யா; கொந்தளிக்கும் ஐரோப்பா!

ஜெர்மனியில் உள்ள லைப்ஸிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் உக்ரைனிய சரக்கு விமானங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் , ஐரோப்பிய நாடுகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல் முயற்சி அம்பலமானதை அடுத்து , ரஷ்யாவிற்கு எதிரான தங்களின் பாதுகாப்புக் கெடுபிடிகளை தீவிரப்படுத்த ஐரோப்பிய ஒன்றியமும் (EU) நேட்டோ (NATO) அமைப்பும் முடிவு செய்துள்ளன.

 

ஜெர்மனி மண்ணில் ரஷ்ய உளவு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் ரஷ்யா நடத்திய மிக ஆபத்தான ‘கலப்பினப் போர்’ (Hybrid Warfare) அச்சுறுத்தல் என ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் லைப்ஸிக் விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் கூடிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்புப் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது. தீவிர புலனாய்வு விசாரணைகளுக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் முயற்சியின் பின்னணியில் ரஷ்யாவின் அரசு ஆதரவு உளவு அமைப்புகள் நேரடியாக ஈடுபட்டிருப்பது உறுதியானதாக ஜெர்மனி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உக்ரைனுக்கு ராணுவக் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் முக்கிய நேட்டோ மையமாக விளங்கும் இந்த விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி, அதிர்ஷ்டவசமாக முறியடிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜெர்மனிக்குத் தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் மற்றும் நேட்டோ தலைமைச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோர், ரஷ்யாவின் இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என எச்சரித்துள்ளனர்.

உக்ரைனுக்கான தங்களின் ராணுவ ஆதரவை முடக்கும் நோக்கில் ரஷ்யா இத்தகைய எல்லைமீறிய செயல்களில் ஈடுபடுவதாகவும், அதற்குப் பதிலடியாக ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவும் ‘நிழற்படக் கப்பல்கள்’ (Shadow Fleet) மீதான தடைகள் மற்றும் ரஷ்ய குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

 

அதேவேளையில், ஜெர்மனியின் பொன் (Bonn) நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூட ஜெர்மன் வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் கிரெம்ளின் மாளிகை இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளன.

அதோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜெர்மனி தூதரக உறவுகளைக் கெடுத்து வருவதாகவும், இதற்கு தகுந்த ராஜதந்திரப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button