உலகம்தமிழ் நாடு

சவுதி கடல் எல்லைக்குள் நுழைந்த தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை

சவுதி அரேபியாவில் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில், தனியார் நிறுவனங்களின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் குறித்த கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை நோக்கி ஈரான் கடற்கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் உள்ளிட்ட மூவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சவுதி அரேபியா – ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினரால் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, கடந்த காலங்களிலும் தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தமிழக மீனவர் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button