
தமிழ்நாட்டில் மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்புவழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இது சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியாகும் என அவர் தெரிவித்தார்.
தற்போதைய நடைமுறையின்படி, இரண்டு உயிருடன் உள்ள குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள தகுதியான பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உயிருடன் உள்ள ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்துடன் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
புதிய முடிவின் மூலம், மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரசு பெண் ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுப்பு கிடைக்கும்.
இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு கடந்த ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2011ல் 90 நாட்களில் இருந்து 6 மாதங்களாகவும், 2016ல் 9 மாதங்களாகவும், 2021ல் 365 நாட்களாகவும் அது உயர்த்தப்பட்டது.
வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்குவது தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையில், TVK சட்டமன்ற உறுப்பினர் பல்லவி , நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தனது பிறந்த குழந்தையை சட்டப்பேரவைக்கு அழைத்து வந்திருந்தார்.
பல்லவி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.





