விளையாட்டு

சர்ச்சைக்குரிய திட்டத்துடன் FIFA செயல்பட்டால், அனைத்து ஐரோப்பிய நாடுகளும் உலகக் கோப்பையைப் புறக்கணிக்கும்.

உலகக் கிண்ண போட்டிகளின் வணிக உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபீஃபாவின் (FIFA) திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான உவேஃபா (UEFA) கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

 

இந்தத் தனியார் முதலீட்டு திட்டத்தை ஃபீஃபா உடனடியாகக் கைவிடாவிட்டால், அதன் உலகக் கிண்ணம் உள்ளிட்ட எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்காது என உவேஃபா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இன்று  (30) அவசரமாகக் கூட்டப்பட்ட உவேஃபாவின் இணையவழி (Online) கூட்டத்தில் 55 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

 

இக்கூட்டத்தில் ஃபீஃபாவின் இந்த வணிகமயமாக்கல் திட்டத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருமனதாக (55-0) வாக்களித்தன. ஃபீஃபா தனது முடிவை முழுமையாகத் திரும்பப் பெற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற தனியார் முதலீடுகளுக்கு வழிவகுக்காது என்ற உறுதியை அளிக்கும் வரை இப்புறக்கணிப்பு அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

ஃபீஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ முன்வைத்துள்ள இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தின்படி, ஃபீஃபாவின் வணிக நடவடிக்கைகளை நிர்வகிக்க 20 பில்லியன் டொலர் மதிப்பில் புதிய துணை நிறுவனம் உருவாக்கப்பட்டு, அதில் 20% பங்குகள் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்படவுள்ளன. மேலும், இதற்கு ஒப்புதல் அளிக்கும் 211 உறுப்பு நாடுகளுக்குத் தலா 20 மில்லியன் டொலர் வரை நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஃபீஃபா அறிவித்திருந்தது.

 

ஃபீஃபாவின் இந்த வணிக நடவடிக்கையைக் கடுமையாக விமரிசித்துள்ள உவேஃபா, “உலகக் கிண்ணம் என்பது வெறும் முதலீட்டுப் பொருள் அல்ல; அது தலைமுறை தலைமுறையாக உருவாக்கப்பபட்ட விளையாட்டு பாரம்பரியம்” என்று தெரிவித்துள்ளது. தனியார் முதலீட்டாளர்கள் உள்ளே நுழைந்தால் கால்பந்தின் ஆளுகையும் அதன் ஆன்மாவும் முற்றிலும் வணிக அழுத்தத்திற்கு உள்ளாகும் என்பதால், “உலகக் கிண்ணம் விற்பனைக்கு அல்ல” என்பதில் ஐரோப்பிய நாடுகள் உறுதியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button