
இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த அழுத்தப் பிராந்தியத்தின் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாகக் கடுமையான காலநிலை நிலவி வருகின்றது.
இதன் காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரணங்கள் மற்றும் சொத்துச் சேதங்களும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று காலை 6 மணி வரையான நிலவரப்படி, நாடளாவிய ரீதியில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, புத்தளம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மொனராகலை, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், மன்னார், திருகோணமலை, மாத்தளை ஆகிய 14 மாவட்டங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களினால் 01 வீடு முழுமையாகவும், 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
தற்போது பாதிக்கப்பட்டவர்கள் புத்தளத்தின் 5 நிலையங்களில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாகவும் கடந்த டிட்வா பாதிப்புகளினாலும் பல போக்குவரத்து வழத்தடங்கல் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
மாத்தளை – ரிவஸ்டன் வீதி: டிட்வா சூறாவளியால் சேதமடைந்த இந்த வீதி தற்போது இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது.
கண்டி – தலாத்துஓயா வீதி: உடதெல்தொட்ட பாலம் உள்வாங்கியுள்ளதால் இந்த வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இராணுவத்தினர் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து அங்கு பெய்லி பாலமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுவரை பயணிகள் கலஹா நகரின் ஊடாக பேராஸவத்த வீதியைப் பயன்படுத்தி அம்பலமான – பெல்வுட் சந்தி வழியூடான மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னாரிலிருந்து மதவாச்சி வரையிலான தொடருந்துப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
ரம்புக்கனையிலிருந்து அம்பேவலை வரையான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன (தற்போது தொடருந்துகள் அம்பேவலையிலிருந்து பதுளை வரை மாத்திரமே இயங்குகின்றன).





