
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் ‘நைட்ரோபியூரான்’ (Nitrofuran) மருந்தின் கூறுகள் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், அவற்றில் புற்றுநோய்க்குக் காரணமான ஆண்டிபயோட்டிக் மருந்துகள் உள்ளதாக பரவிய தகவல்கள் அறிவியல் ஆதாரமற்றவை என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதாகக் கூறப்படும் நைட்ரோபியூரான் (Nitrofuran) மருந்தின் கூறுகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் வெளியான செய்திகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின.
இதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் முட்டைகள் ஆய்வக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
இதுகுறித்து, நைட்ரோபியூரான் மருந்து கால்நடைகள் மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலும் 2011ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முட்டைகளை மட்டுமே ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நாட்டின் முழு முட்டை உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவது அறிவியல்பூர்வமானதல்ல என்றும் FSSAI சுட்டிக்காட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




