தமிழீழம்

மாவீரர்நாள் நினைவேந்தலை நடத்துவதில் யாழ். மாநகரசபையில் இழுபறி

நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாநகர மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்தார்.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் கடந்த சில வருடங்களாக மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்று வருகின்றது.

ஆனால், இந்த முறை அந்தப் பகுதியை இரண்டு தரப்புக்கள் கோருவதால் அதை யாருக்கு வழங்குவது என்பதில் முடிவு எட்டப்படாத நிலை காணப்பட்டது.

இதையடுத்து யாழ். மாநகர சபையின் கடந்த மாதாந்த அமர்வு நடைபெற்றபோது மேயரின் அறிவிப்பில், மாவீரர் நாள் நினைவேந்தலைச் செய்வதற்கு நல்லூரில் ஒரே இடத்தை இரண்டு தரப்புக்கள் கோரும் நிலையில் அந்த இடத்தை மாவீரர் வார காலத்தில் வாடகைக்கு விடுவதில்லை என்றும், எதிர்வரும் காலங்களில் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் நினைவேந்தலை யாழ். மாநகர சபை பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும் என்றும் யோசனையை முன்வைத்தார்.

இந்த யோசனை தொடர்பில் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதையடுத்து அது தொடர்பில் முடிவுகள் எட்டப்படவில்லை. அதில் இணக்கத்தை ஏற்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்ட போதும் இணக்கமான நிலை ஏற்படவில்லை.

யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் மேயரின் யோசனையை வரவேற்ற போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக எதிர்த்தது.

இந்நிலையில், நேற்றுநடைபெற்ற யாழ் மாநகர சபை அமர்விலும் இந்த விடயம் தொடர்பில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ். மாநகர சபை மேயர், “சைக்கிளோ, மானோ தனியாக ஒரு கட்சி நினைவேந்தல் செய்ய இடமளிக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.” – என்றார்.

மேயரின் முடிவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மேயரின் முடிவை வரவேற்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button