உலகம்

அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை

அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கூடுதல் வரி விதிப்பையும் அமுல்படுத்தினார். இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு, 155 சதவீத வரி விதிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

அந்த முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்தார். தற்போது இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”நான் சீனாவுடன் நட்புறவுடனேயே இருக்க விரும்புகிறேன். வரி விதிப்பில் சீனா எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டது.

உலக நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க விரும்பும் சீனாவை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல், 155 சதவீத வரி விதிக்கப்படும்” என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் உக்கிரமடைந்துள்ளது.

அமெரிக்க-சீனா வரிவிதிப்புப் போர் குறித்து கொல்கத்தாவில் சீனத் தூதர் வெய் விடம் கேட்டபோது, அமெரிக்க-சீன வரிவிதிப்புப் போர் பிரச்சினையில், சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை.

ஆனால் கடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டால், நாங்கள் நிச்சயமாக பதிலளிப்போம். நாங்கள் போராடுவோம், ஆனால் எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும். இது தான் எங்கள் அணுகுமுறை என்று கூறினார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button