
மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி கிண்ணத்தை தம்வசமாக்கியுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி டுபாயில் நேற்று (13) இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்டத்திற்காக களமிறங்கிய சுமிர்த்தி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அதிவிரைவான ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுசேர்த்தனர்.
ஷபாலி வர்மா 68 ஓட்டங்களையும், சுமிர்த்தி மந்தனா 59 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றனர்.
அதன்பிறகு ஆடுகளம் வந்தவர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் பின்னர் இந்திய ஓட்ட எண்ணிக்கையை இலங்கை அணி வெகுவாக கட்டுப்படுத்தினர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மிதாலி அயோதா, சமதி அத்தபத்து, சமுதி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்நிலையில் 184 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இதேவேளை வெற்றிக்கு பிறகு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது வெற்றிக் கோப்பையை பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி வசமிருந்து பெற இந்திய வீராங்கனைகள் மறுத்துவிட்டனர். ‘கோப்பையை நான் தான் வழங்குவேன்’ என மோசின் நக்வியும் தனது உறுதியை வெளிப்படுத்தினார். இறுதியில் பட்டம் வென்ற இந்திய அணி, கோப்பையை பெறாமல் வெறுங்கையோடு தொடரை முடித்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போதும் இதே காரணத்தால் இந்திய அணிக்கு கோப்பை கிட்டவில்லை





