
லண்டனில் உள்ள நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் மூளைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றிய உலகின் முதல் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் 48 வயதான ஒருவரின் பார்வை காப்பாற்றப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவைச் சிகிச்சை கடந்த மே மாதம், லண்டனில் உள்ள National Hospital for Neurology and Neurosurgery (NHNN) மருத்துவமனையில் நடைபெற்றது. இது University College London Hospitals NHS Foundation Trust-இன் ஒரு பகுதியாகும். நோயாளி Rhys Hibbert குணமடையும் வரை, இந்தச் சிகிச்சை தொடர்பான விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.
அறுவைச் சிகிச்சையின் போது மருத்துவர்கள் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தனர். அதேவேளை, AI அமைப்பு நேரடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, ஹிபர்ட்டின் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்த 11 மில்லிமீட்டர் அளவிலான கட்டியைச் சுற்றியிருந்த நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் போன்ற முக்கியமான உடற்கூறு பகுதிகளைஅடையாளம் காண மருத்துவர்களுக்கு உதவியது.
“நான் மயக்கத்திலிருந்து விழித்தபோது, அறையில் இருந்த அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது,” என்று ஹிபர்ட் தெரிவித்தார்.
அறுவைச் சிகிச்சை முடிந்து ஒரு வாரத்திற்குள் கண்ணாடி அல்லது ஊன்றுகோல் இல்லாமல் தனியாக நடக்கக்கூடிய நிலையில் அவர் இருந்தார். தற்போது தனது வாடிக்கையாளர் சேவை மேலாளர் பணிக்கும் திரும்பியுள்ளார்.
“என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் 360 டிகிரி பரந்த காட்சியாகப் பார்ப்பது போல் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
AI எப்படி உதவியது?
புதிய AI தொழில்நுட்பம், மூளையில் உள்ள மிகச்சிறிய உடற்கூறு அமைப்புகளை வண்ணக் குறியீடுகள் மூலம்அடையாளப்படுத்துகிறது. இதன் மூலம் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் முக்கியமான நரம்புகள், இரத்த நாளங்கள் மற்றும் பிற திசுக்களைத் தெளிவாக அடையாளம் கண்டு பாதுகாப்பாகச் செயல்பட முடிகிறது.
மருத்துவமனை இதற்கு முன்பு இந்தத் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தது. ஆனால், நோயாளி ஒருவரிடம் இந்த AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட முதல் அறுவைச் சிகிச்சை இதுவாகும்.
ஒரு மில்லிமீட்டர் தவறினாலும் ஆபத்து
பிட்யூட்டரி சுரப்பி, இரத்த நாளங்கள் மற்றும் பார்வையைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் ஆகியவை ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.
எனவே, அறுவைச் சிகிச்சையின் போது ஒரு மில்லிமீட்டர் அளவுக்குக் கூட தவறு ஏற்பட்டால், பார்வை இழப்பு, பக்கவாதம் அல்லது மரணம் போன்ற மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
UCL-ஐச் சேர்ந்த ரோபோட்டிக்ஸ் மற்றும் AI இணைப் பேராசிரியரும், இந்த AI அமைப்பின் தொழில்நுட்பத் தலைவருமான டாக்டர் சோபியா பானோ, நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சை காணொளிகளிலிருந்து AI கற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர் தனது தொழில் வாழ்க்கையில் பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டுதான் காணக்கூடிய அளவிலான பல்வேறு அறுவைச் சிகிச்சை அனுபவங்களை இந்த AI அமைப்பு கற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், முக்கிய உடற்கூறு அமைப்புகள், அறுவைச் சிகிச்சை கருவிகள் மற்றும் திசுக்களுடனான தொடர்புகளை நிகழ்நேரத்தில் அடையாளம் காண, மிக நுட்பமான அறுவைச் சிகிச்சைகளில் மருத்துவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்வையை இழக்கும் அபாயத்தில் இருந்த நோயாளி
ஹிபர்ட்டின் உடல்நிலை முதலில் அறுவைச் சிகிச்சையின்றி கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2024ஆம் ஆண்டு நோய் கண்டறியப்பட்ட பின்னர் அவரது அறிகுறிகள் மோசமடைந்தன.
கடுமையான ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பார்வைக் குறைபாடுகள் ஏற்பட்ட நிலையில், அறுவைச் சிகிச்சை செய்யப்படாவிட்டால் அவர் முழுமையாக பார்வையை இழக்கும் அபாயத்தில் இருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹிபர்ட் கூறுகையில், NHNN மருத்துவமனை 1859ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், உலகின் முதல் பிரத்யேக நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவமனையாகவும் திகழ்கிறது. அதே மருத்துவமனை உலகின் முதல் AI உதவியுடனான நரம்பியல் அறுவைச் சிகிச்சையையும் மேற்கொண்டிருப்பது தனக்கு மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது என்றார்.
இந்த அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கிய National Institute for Health and Care Research (NIHR) நிறுவனத்தின் புதுமைத் துறையின் அறிவியல் இயக்குநர் பேராசிரியர் மைக் லூயிஸ், இந்த முன்னோடி அறுவைச் சிகிச்சை, மேம்பட்ட AI தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு உதவுவதற்கும் நோயாளிகளுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்கும் கொண்டுள்ள பெரும் சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.





