
பிரபல இந்திய நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர், தனது Avni Cinemax (P) Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கீதீஸ்வரனை சந்தித்து, “Maharanis – Tinsel Queens” என்ற திரைப்படத் திட்டம் குறித்து கலந்துரையாடினார்.
இந்தத் திரைப்படத் திட்டம், இலங்கையின் வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு அறிமுகப்படுத்துவதுடன், தீவின் இயற்கை எழில்மிகு சுற்றுலா தலங்களையும் சர்வதேச பார்வையாளர்களிடம் திரைப்படம் மூலம் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சந்திப்பின்போது, இந்தத் திரைப்படம் மூலம் இலங்கையின் வரலாறு மற்றும் கலாசாரத்தை உலகளவில் விளம்பரப்படுத்தும் வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், இலங்கையை சர்வதேச திரைப்படப் படப்பிடிப்பிற்கான கவர்ச்சிகரமான இடமாகவும், கலாசார சுற்றுலா மையமாகவும் முன்னிறுத்தும் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக, சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.





