
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில், பொதுமக்களை குறிவைத்து நடைபெறும் இரண்டு வகையான மோசடிகள் வேகமாக அதிகரித்து வருவதாக மாகாண காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் முதன்மையானது சங்கிலித் திருட்டு. இந்த முறையில், குற்றவாளிகள் வழி கேட்பது அல்லது உதவி கோருவது போன்ற சாதாரண காரணங்களைக் கூறி, குறிப்பாக முதியவர்களிடம் நெருங்குகின்றனர்.
பின்னர், நன்றிக்காக கழுத்தில் சங்கிலி அணிவிப்பது போல நடித்து, அவர்களின் உண்மையான நகைகளை திருடிவிட்டு, அதற்குப் பதிலாக மதிப்பில்லாத போலி நகைகளை அணிவித்து விட்டு தப்பிச் செல்கின்றனர். பலர் வீட்டிற்கு திரும்பிய பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.
இரண்டாவது மோசடி எரிபொருள் திருடர்களுடன் தொடர்புடையது.
வாகன நிறுத்துமிடங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகளில், “எரிபொருளுக்கு பணம் இல்லை” என்று கூறி, ஓட்டுநர்களிடம் ரொக்கப் பணம் கேட்கின்றனர்.
பதிலுக்கு, மதிப்புமிக்க நகை எனக் கூறி சில பொருட்களை வழங்குகிறார்கள். ஆனால் பின்னர், அவை மதிப்பில்லாத போலி நகைகள் என்பது தெரியவருகிறது.
இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, அறிமுகமில்லாதவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம், அவர்கள் உங்கள் நகைகளைத் தொட அனுமதிக்க வேண்டாம், மேலும் யாராவது வற்புறுத்தினால் அங்கிருந்து உடனடியாக விலகிச் செல்லுங்கள் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக 117 என்ற அவசர எண்ணின் மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது





