ஜெனீவாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Saint-Antoine தொல்லியல் தளத்தின் (SaSA) பிரமாண்ட திறப்பு விழா சனிக்கிழமை பொதுமக்களின் பெரும் வரவேற்புடன் நடைபெற்றது.
Théodelinde Esplanade-க்கு அடியில் அமைந்துள்ள இந்தத் தொல்லியல் தளம், சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில்அமைந்துள்ளது. இங்கு ஜெனீவாவின் 2,000 ஆண்டுகால வரலாற்றைச் சேர்ந்த அரிய தொல்லியல் சின்னங்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
SaSA மேலாளர் சிண்டி டுலாக் கூறுகையில், திறப்பு நிகழ்வின்போதே ஏராளமான மக்கள் திரண்டதாக தெரிவித்தார். உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பங்கள் பல ஆண்டுகள் பணியாற்றி உருவாக்கப்பட்ட இந்தப் புதிய தளத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
2010ஆம் ஆண்டு தொடங்கிய பயணம்
இந்தத் திட்டத்தின் வரலாறு 2010ஆம் ஆண்டு, esplanade பகுதியை மறுசீரமைக்கும் பணிகளின்போது முக்கியமான தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது.
இதையடுத்து 2012 முதல் 2015 வரை மிக நுணுக்கமான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவற்றைப் பாதுகாப்பதுடன் பொதுமக்களும் பார்வையிடும் வகையில் தளம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக CHF 14.5 மில்லியன் ($18 மில்லியன்) மதிப்பிலான திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. விரிவான கட்டுமானப் பணிகள் 2023 செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்தன.
2,000 ஆண்டுகால வரலாற்றை ஒரே இடத்தில் காணலாம்
தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மேல்நிலை ஒளிச்சாளரங்கள் (skylights) இயற்கை ஒளியை உள்ளே கொண்டுவருகின்றன.
புதிய esplanade-லிருந்தே அகழ்வாராய்ச்சியின் ஒரு பகுதியை கீழே இறங்காமலேயே பார்க்க முடியும். ஒளிச்சாளரங்களில் ஒன்றின் வழியாக பார்வையாளர்கள் கீழே சென்று தொல்லியல் தளத்தை பார்வையிடுகின்றனர்.
அங்கு:
- 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த Gallo-Roman குடியிருப்பு
- 3ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட கல்லறைகளைக் கொண்ட புதைகுழித் தொகுதி
- 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த Saint-Laurent இறுதிச்சடங்கு தேவாலயத்தின் ஒரு பகுதி
- 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டைப் பாதுகாப்புச் சுவர்களின் எச்சங்கள்
ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆராய்ச்சிக்காக பாதுகாக்கப்படும் எலும்புக்கூடுகள்
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடும் அடங்கும்.
அந்தப் பெண் இறக்கும் போது 25 முதல் 50 வயதுக்குள் இருந்திருக்கலாம் என வழிகாட்டி தெரிவித்துள்ளார். அவர் மீது வன்முறை மேற்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பார்வைக்காக ஒரு எலும்புக்கூடு மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற எலும்புக்கூடுகள் மேலதிக அறிவியல் ஆய்வுகளுக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கலைக்கும் இடம்
SaSA ஒரு அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் அறிவியல் ஆராய்ச்சி தளமாகவும் செயல்பட உள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் எச்சங்கள் குறித்து இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக சிண்டி டுலாக் தெரிவித்தார்.
இதற்காக விஞ்ஞானிகள் இங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
அதேவேளை, சமகாலக் கலைஞர்கள் தற்காலிகக் கண்காட்சிகளை நடத்துவதற்காக ஒரு கலாசாரப் பகுதியும்அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா சனிக்கிழமை பிற்பகுதி வரை தொடர்ந்தது. சிறுவர்கள் பெரிய கொள்கலன்களில் மண்வெட்டி மற்றும் சிறிய அகழ்வுக் கருவிகளைப் பயன்படுத்தி தொல்லியல் அகழ்வாராய்ச்சியை முயற்சித்துப் பார்க்கும் வாய்ப்பையும்பெற்றனர்.
இந்த நிகழ்வின் அதிகாரப்பூர்வ பகுதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஜெனீவா மண்டலம் மற்றும் ஜெனீவா நகர அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





