
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கை எட்டப்பட்டு, சுமார் 30 நாட்களின் பின்னர் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான திட்டம் குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடி வருவதாக ஜப்பானின் நிக்கேய் (Nikkei) நாளிதழ் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு இராஜதந்திர மூலம் ஒன்றை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கை எட்டப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த 30 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கடற்படை கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுக்கும்
.அதன் பின்னர், அனைத்து நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் அந்த நீரிணை வழியே சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும் என நிக்கேய் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததும், கப்பல்களிடம் இருந்து போக்குவரத்துக்கான கட்டணங்களை (Transit Fees) வசூலிப்பதையும் ஈரான் நிறுத்திக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கப்படும்.
இந்த இரண்டு மாத கால இடைவெளியில், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





