
தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதா, இல்லையா என்பது குறித்து கட்சியின் மாநிலத் தலைமை முடிவு செய்யும் அந்த கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுதைகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கோரிக் கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்துக் கட்சியின் மாநிலத் தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும் என்றும், அதனை அகில இந்திய தலைமை இறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், தங்களது கூட்டணி கொள்கை ரீதியானது என்றும் அது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனது ஆதரவை வழங்கியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இது குறித்து ஆலோசிக்க வெள்ளிக்கிழமை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.





