
இலங்கையில் வருடாந்தம் சுமார் 19 சதவீத காய்கறிகளும் மற்றும் 21 சதவீத பழங்களும் வீணாக்கப்படுவதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.கே.டி.எஸ். ரணவீர மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரேணுகா சில்வா ஆகியோர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்
பேராசிரியர் ரணவீரவின் கருத்துப்படி, அறுவடைக்குப் பின்னரான இழப்புகளுக்கு முறையற்ற அறுவடை முறைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பொதியிடுதல் மற்றும் கையாளுதலில் உள்ள குறைபாடுகள், மற்றும் குளிரூட்டப்பட்ட களஞ்சிய வசதிகள் இல்லாமை ஆகியவை முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை ஒரு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1 முதல் 4 மெட்ரிக் டொன் வரையான உணவு கழிவாக வெளியேறுவதாகவும், நகர்ப்புற வீடுகளில் வாரமொன்றுக்கு 1,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான உணவு வீணாக்கப்படுவதுடன், சராசரியாக 34 கிலோகிராம் உணவு அப்புறப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவுப் பாதுகாப்பு ஓரளவு முன்னேற்றமடைந்தாலும், மக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் கவலைக்கிடமாக உள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் ரேணுகா சில்வா சுட்டிக்காட்டினார்.
மேலும், கோவிட்-19 தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் ‘டிட்வா’ சூறாவளி காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் மலிவான, போஷாக்கு குறைந்த உணவுகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன
அத்தோடு, மக்கள் தமது பசியைப் போக்குவதில் மாத்திரம் கவனம் செலுத்துவதால் இறைச்சி, மீன் மற்றும் முட்டை நுகர்வைக் குறைத்துள்ளனர். இது சிறுவர்கள் மற்றும் முதியவர்களிடையே கடுமையான ஊட்டச்சத்துப் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் செல்வாக்கினால் இளைஞர்களும் மாணவர்களும் ஆரோக்கியமற்ற, அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அடிமையாகி வருகின்றனர்
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களைக் குறைப்பதற்கும், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என பேராசிரியர் ரேணுகா சில்வா வலியுறுத்தியுள்ளார்.





