
அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளில் நிலவும் முறைகேடுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன், இது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஆதரவை அவுஸ்திரேலியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அவுஸ்திரேலியாவின் கடன் வழங்குநருக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச கடன், மூன்றாம் தரப்பினரால் கணினி ஊடுருவல் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில், திறைசேரியின் மின்னஞ்சல் அமைப்பில் தரவு மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, அதனை பயன்படுத்தி குறித்த தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக திறைசேரி உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வெளியக விசாரணைகளுக்காக முறைப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை ஆராய்வதற்காக திறைசேரியின் பிரதி செயலாளர்கள் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது
அத்துடன், கடன் செலுத்தல் உறுதிப்பாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதுடன், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் குற்றப்புலனாய்வு துறைக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.





