
லெபனான் அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, ஹிஸ்புல்லா அமைப்பு தனது வசமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என லெபனான் ஜனாதிபதி அவுன் வலியுறுத்தியுள்ளதாக aljazeera செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு நாட்டின் போர் மற்றும் அமைதி குறித்த தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் பெய்ரூட் (Beirut) அரசாங்கத்திற்கு மாத்திரமே உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லெபனான் நாட்டின் இறைமையைப் பாதுகாக்கவும், போர் தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமையை அரசு தன்பால் வைத்துக்கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் ஜனாதிபதி தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2024 நவம்பரில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வந்தது. இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்தே எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா முன்னெடுத்துள்ள போருக்குப் பதிலடியாகவும் ஹிஸ்புல்லா தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதற்கிடையில், லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய குண்டுவீச்சுகளில் இதுவரை 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் பிராந்திய போர்ச் சூழலுக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் இராணுவக் கட்டமைப்பைக் கலைக்க லெபனான் அரசு எடுத்துள்ள இந்த முடிவு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.





