
அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்பினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, அமெரிக்கா பின்வரும் அமைப்புகளில் இருந்து விலகுகிறது.
1. ஐநா சார்ந்த அமைப்புகள்: ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women), ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) உள்ளிட்ட 31 ஐ.நா அமைப்புகள்.
2. ஏனைய சர்வதேச அமைப்புகள்: சர்வதேச சூரியசக்தி கூட்டணி (International Solar Alliance), கொழும்புத் திட்டம் (Colombo Plan) உள்ளிட்ட 35 ஐ.நா அல்லாத அமைப்புகள்.
அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகவும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் “அமெரிக்கா முதலில்” (America First) என்ற கொள்கைக்கும் தேசிய நலனுக்கும் முரணாக இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, சர்வதேச நிதியுதவிகள் அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதை அனுமதிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முடிவினால் சர்வதேச அளவில் சுகாதாரம், கல்வி, மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பெருமளவிலான நிதியுதவி நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கொழும்புத் திட்டம் (Colombo Plan) போன்ற அமைப்புகளில் அமெரிக்காவின் விலகல் ஆசிய பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





