
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் படகுகளைக் கண்காணிக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் ‘கப்பல் கண்காணிப்பு கட்டமைப்பில்’ (Vessel Monitoring System – VMS), சட்டவிரோதமான முறையில் ஊடுருவி தகவல்கள் பெறப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுமார் 57 வெவ்வேறு ஐபி (IP) முகவரிகளைப் பயன்படுத்தி இந்தக் கட்டமைப்புக்குள் யாரோ ஊடுருவியுள்ளதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் சுற்றிவளைப்புகள் தொடர்பான மிக முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கசிந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
கடல் வழியாக நாட்டுக்குள் கடத்தப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதில் இந்த VMS கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த காலங்களில் இந்தக் கட்டமைப்பின் மூலம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டே, கடற்படையின் உதவியுடன் பல பாரிய போதைப்பொருள் வேட்டைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
தற்போது கிடைத்துள்ள உளவுத்துறை தகவல்களின்படி, அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அதிகாரிகளைத் தவிர, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களும் இந்தக் கட்டமைப்பிற்குள் நுழைந்து தரவுகளைப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் இது குறித்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் வழிகாட்டலில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தற்போது இந்தக் கட்டமைப்பிற்கான அனைத்து கடவுச்சொற்களும் மாற்றப்பட்டுள்ளன. புதிய அணுகல் விபரங்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் குறித்த பிரிவின் பணிப்பாளருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





