
யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், உள்ளக விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று (13.08.2025) வெளியிட்ட அறிக்கை தொடர்பில் செய்திச் சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த அரசாங்கத்தின் கீழ் சர்வதேச விசாரணைக்கான தேவை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்கான தேவை ஏற்படவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்த போது, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கினார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லை.
எனவே, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செம்மணி விவகாரம்
யுத்த காலத்தில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், உள்ளக விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
அத்துடன், செம்மணி விவகாரத்தையும் தற்போதைய அரசாங்கம் மூடி மறைக்கவில்லை. செம்மணி மனித புதைகுழி, விடுதலை புலிகளின் கீழும் இராணுவத்தின் கீழும் இருந்துள்ளது.
ஆகவே, செம்மணியில் கிடைக்கும் மனித என்புக்கூடுகள் எந்த காலத்திற்கு உரியது என்பதை கண்டறிய வேண்டும்.
அதன்பின்னர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், இவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க முடியாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.





