இலங்கைதமிழீழம்

ஐவர் படுகொலை வழக்கு- பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் இன்று (01) இணையவழி (Zoom) காணொளி ஊடாக உத்தரவிட்டார்.

கடந்த 2008ஆம் ஆண்டு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, காத்தான்குடியில் TMVP கட்சியின் உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு – கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்தனர்.

இக்கொலைகள் தொடர்பாக பிள்ளையான், இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவரும், லண்டனில் வசிக்கும் ‘முகமட் பாய்ஸ்’ என்பவரும் உட்பட 4 பேருக்கு எதிராக கடந்த 2026 ஜூன் 17ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை இன்று 01) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறைச்சாலையிலிருந்து இணையவழி (Zoom) காணொளி ஊடாக சந்தேகநபர்களான பிள்ளையான், முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகிய மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை பரிசீலித்த பதில் நீதவான், சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், லண்டனில் தலைமறைவாக உள்ள ‘முகமட் பாய்ஸ்’ என்பவருக்கு எதிரான திறந்த பிடியாணையை (Open Warrant) மீண்டும் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button