
மத்திய தரைக்கடலில் (Méditerranée) தத்தளிக்கும் அகதிகளை (Migrants) மீட்பது யார், அவர்களுக்கான பொறுப்பை எந்த நாடு ஏற்பது என்பது தொடர்பாகச் ஜேர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் தூதரக மோதலாக உருவெடுத்துள்ளன.
ஜேர்மனியைச் சேர்ந்த ‘சீ-வாட்ச் 5’ (Sea-Watch 5) என்ற அகதிகள் மீட்புக் கப்பலை இத்தாலிய அதிகாரிகள் 45 நாட்களுக்கு முடக்கியதோடு, அந்த மனிதநேயத் தொண்டு நிறுவனத்திற்கு 7,500 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளனர். கடலில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் போது லிபியக் கடலோரக் காவல்படைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்பதே இத்தாலி கூறும் காரணமாகும்.
எனினும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் லிபிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட முடியாது எனத் தொண்டு நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுக்கின்றன. இத்தாலியின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தங்களுக்கு அத்தகைய எந்தவொரு கட்டளையும் இடவில்லை என ‘சீ-வாட்ச்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
தொண்டு நிறுவனங்களின் இந்தப் பணிகளால் அகதிகளின் வருகை அதிகரிப்பதாகவும், இது மறைமுகமாக ஆட்கடத்தல்காரர்களுக்கு (Passeurs) உதவுவதாகவும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) மற்றும் ஜேர்மனியின் வலதுசாரிக் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, இத்தாலிய அரசு ‘பியான்டேடோசி’ (Piantedosi) என்ற புதிய சட்டத்தின் மூலம் மீட்புக் கப்பல்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மறுபுறம், இது ஒரு மனிதநேயப் பணி என ஜேர்மனியின் இடதுசாரிக் கட்சிகள் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கின்றன.
டப்ளின் விதியும் (Règlement de Dublin) நாடுகடத்தலும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘டப்ளின்’ விதிகளின்படி, முதலில் இத்தாலி வழியாக நுழைந்து பின்னர் ஜேர்மனிக்கு வந்த தஞ்சம் கோருவோரை மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்ப ஜேர்மனி அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி இத்தாலி இதனைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
“ஜேர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களின் கப்பல்கள் குடியேறிகளை இத்தாலிக் கரைகளில் இறக்கிவிடுவதை நிறுத்தும் வரை, ஜேர்மனியிலிருந்து ஒரு குடியேறியைக் கூட நாங்கள் திரும்பப் பெறப் போவதில்லை” என இத்தாலியத் துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி (Matteo Salvini) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த விரிசல், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.





