
இறக்குமதிகள் மேற்கொள்ளப்படாமல், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான விசாரணை, பேலியகொட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் பெருந்தொகை பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
வழமையான பொலிஸ் சோதனையின்போது முச்சக்கர வண்டியில் பல இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சந்தேகம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இலங்கையிலிருந்து வங்கிகள் ஊடாக வெளிநாட்டு கணக்குகளுக்கு பெருந்தொகையான பணம் மாற்றப்பட்டிருந்ததாகவும், அதற்குப் பதிலாக நாட்டுக்குள் உரிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதியுடன் தொடர்புடைய சட்டபூர்வமான அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட உரிய நடைமுறைகளுக்கு உட்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணை முதலில் மேல் மாகாண குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIB) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்கள் மற்றும் ஒரு வர்த்தகர், ஆகஸ்ட் 20ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.





